Wednesday 2 November 2011

கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் - ஒரு பார்வை


சென்னையில் பொது மக்களுக்கு இடையுறாக கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு சீல் வைத்து மூடிவிட்டது; இதே போல எல்லா ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொண்டால் மிக நன்றாக இருக்கும் .
எங்கள் ஊர் கோவையில் சென்ற அரசு வந்த புதிதில் நல்லது செய்கிறேன் பேர்வழி  என்று ஊருக்கு நடுவில் ஒரு ஆம்னி பஸ் ஸ்டாண்டை நிறுவிவிட்டு சென்றுள்ளனர்.
கோவை வந்தவர்களுக்கு தெரியும், காந்திபுரம் கோவையின் இதயம் போன்றது. இங்கு ஏற்கனவே உள்ள அரசு பேருந்துகள் இயங்கும் பஸ் நிலையம்,இட வசதி மற்றும் மாநகரின் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு  - உக்கடம் , சிங்காநல்லூர் மற்றும் மிக சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலை என மூன்று இடங்களில் இயக்கப்பட்டுவருகிறது .

கோவைக்கு TIDEL PARK வந்த பிறகு, கணபதியை அடுத்துள்ள சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றத்தை சார்த்த பகுதிகள் மிக விரைவாக குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. (சென்னை திருவான்மியூர் போல்), மேலும் அரசின் வீட்டு வசதி வாரியம் கணபதியை அடுத்து உள்ள கணபதி மாநகர் பகுதியில் பல ஆயிரக்கணக்கில் வீடுகளை கட்டி விட்டதும், அதை தொடர்ந்து அதன் சுற்று பகுதிகளும் விரிந்து இன்று மிக பெரிய குடியிருப்பு பகுதிகளாகிவிட்டன. கணபதி அடுத்து கோவில்பாளையம் வரை விரிந்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் காந்திபுரம் வர ஒரே பாதை தான் உள்ளது அது சக்தி சாலை. மக்கள் நெரிசல் அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் , கணபதியை அடுத்துள்ள பகுதிகளில்இருந்து தினமும் காந்திபுரம் வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை வெகுவாக நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே வருகிறது.

காந்திபுரம் கணபதியை இணைக்கும் முக்கிய சாலையில், அதுவும் மிக சிறிய அளவிலான இடத்தில் சென்ற அரசு ஆம்னி பேருந்து நிலையத்தை நிறுவி சென்றுள்ளது. அங்கங்கே சிதறி கிடந்த ஆம்னி பஸ்களை இணைத்தது நல்லதே என்றாலும் இந்த இடத்தில் ஆம்னி பஸ் நிலையத்தை நிறுவியதால் தினம் தினம் வாகன நெரிசல் அதிகரித்து, பலமணி நேர முடக்கம் ஏட்படுகிறது.

அன்றாட மக்கள் மட்டும் மின்றி வெளியூர் செல்லும் எல்லா பயணிகளும் சங்கமிக்கும் இடம் என்பதால் , மாலை ஆறு மணிக்கு மேல் அந்த இடத்தை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர்களை வழியனுப்ப வருபவர்களின் வாகனங்கள் , வாடகை ஆட்டோ , கால் டாக்ஸி என பெரும் திரளான கூட்டத்தை மேலும் நெரிசலை ஏற்ப்படுத்த இங்கு பஸ் நிலையம் உள்ளது காரணமாக உள்ளது.

காந்திபுரம் கிராஸ்- கட் ரோடு,  100 அடி ரோடு மற்றும் DR ராதாகிருஷ்ணன் ரோடு - இவை முன்றும்  PARRAELL ஆக அமையப்பட்ட சாலைகள். இவை முன்றையும்  இணைக்க கிட்டத்தட்ட 10 குறுக்கு வீதிகள் உள்ளனன. இதனஊடே சென்று வருவதென்பது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தது அன்று.
ஆனால் இன்றோ வாகன நெரிசலை நேர்ப்படுத்துவதர்க்காக இருக்கும் எல்லா இணைப்புகளையும் முடிவிட்டார்கள். பத்தாதற்கு ஏகப்பட்ட NO ENTRY , ONE WAY .

எப்படி இங்கு பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்தார்கள் என்றே தெரியவில்லை.

மேலே குறிப்பிட்டதுப்போல், இந்த இடம் ஒன்றும் அவ்வளவு விசாலமான இடமில்லை; இன்றும் பல ஆம்னி பஸ்கள் காந்திபுரம் அரசு விரைவு பேருந்து அருகிலேயே செயல் பட்டு வருகிறது. அரசு விரைவு பேருந்து நிலையத்தை நோக்கி செல்வோரை கை பிடித்து இழுக்காத குறையாக கூவி கூவி அழைப்பதை இன்றும் பார்க்கலாம். இப்படி முழுமையா ஆம்னி பஸ்களுக்கும் பலன் அளிப்பதில்லை இந்த பஸ் நிலையம்.

மேலும் கோவையிலிருந்து சென்னை, பெங்களூர்,மற்றும் கேரளாவிற்கு மட்டுமே பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன, மற்றும் சில பஸ்கள் மதுரையை தாண்டி செல்கின்றன.

சென்னை, பெங்களூர் செல்லும் பஸ்கள் - ஈரோடு மார்கமாகவும் , கேரளா செல்லும் பஸ்கள் பாலக்காடு மார்கமாகவும் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பொள்ளாச்சி அல்லது தாராபுரம் மார்கமாகவும் இயக்கப்படுகின்றன.

ஈரோடு மற்றும் தாராபுரம் மார்கமாக செல்லும் எல்லா பஸ்களையும் சிங்காநல்லூர் அல்லது கொடிசியா வளாகம் - இங்கிருத்து இயக்க செய்யலாம்.

பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு மார்கமாக செல்லும் பஸ்கள், சுங்கம் - உக்கடம் பை பாஸ் சாலை அருகே இருந்து செல்லுமாறு திட்டமிடலாம்.

எல்லா ஊர்களிலும், நகரின் வாகன நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட, கோவையில் மட்டுமே வாகன நெரிசலை உருவாக்கும் விதமாக இந்த ஆம்னி பேருந்து நிலையம் செயல் பட்டு வருகிறது.

இந்த எல்லா சிக்கல்களையும் தீர்க்க ஒரே வழி .. பஸ் ஸ்டாண்டை இங்கிருந்து மாற்றுவதுதான் .

கவனிப்பார்களா?





No comments:

Post a Comment